பண்ணைபுரத்தில்
பிறந்தவன் நீ
பின்னணி இசைக்கு
புகழ் சேர்த்தவனும் நீ..
ஞானதேசிகனாய்ப் பிறந்து
டேனியல் ராசய்யாவாய் வளர்ந்து
இளையராஜாவாய் இசையுலகை
ஆக்கிரமித்த இசை சக்கரவர்த்தி நீ..
பெயரில் தான் இளையராஜா
இசையில் எவரையும் முந்திய ராஜா
ஆர்மோனியத்தில் நீ விரலை வைத்தால்
ஆச்சரியத்தில் பிறர் மூக்கில் வைப்பர்..
அன்னக்கிளிக்கு முன்னர்
மெல்லிசை மன்னர்
அன்னக்கிளிக்குப் பின்னர்
பண்ணைபுரத்து மன்னர்..
உன் ஆர்மோனியத்திற்கு
உட்காராத வரிகள் இல்லை
உன் இசைக்கு மயங்காதோர்
உலகில் எவரும் இல்லை..
தயாரிப்பாளர் தலையில் விழ
இருந்த துண்டினை நின் இசையால்
அவர்தம் தோளில் விழ வைத்த
இசை வள்ளல் நீ..
கர்நாடக சங்கீதம் கோலோச்சிய
காலத்தில் நாட்டுப்புற சங்கீதத்தை
நடு வீட்டினில் கேட்கச் செய்த
இசை அரசன் நீ..
பின்னணி இசையினைக் கொண்டு
படத்தின் பெயரையும், முழுத் திரைக் கதையினையும் எம் மனத் திரையினில்
காட்டிய முடிசூடா மன்னவன் நீ..
ஆயிரம் படங்கள் அதிலே படைத்த
ஆறாயிரம் பாடல்கள் எவர்க்கும்
ஆயுசு போதாது அவ்வளவையும்
அலசி ஆராய..
பிடித்தது, பிடிக்காதது என்று பிரித்து
பார்க்க இயலாத வகையில் ஒவ்வொரு
பாடலுக்கும் மிகப் பிரமாதாமாய் இசை
உருவம் படைத்த பிரம்மா நீ..
பாட்டுக்கு மெட்டானாலும், உன்
மெட்டுக்குப் பாட்டானாலும் எதிலும்
முன்னனி வகுத்து நிற்பது நின்
பின்னணி இசையே ஆகும்..
ராகமும் தாளமும் ரசிகனுக்கு
நீ இட்ட இசைப் பிச்சை, பாடலின்
சரணமும் பல்லவியும் உன்னிடம்
சம்மணமிட்டு கிடக்கும்..
கதா நாயகன் பெயரிலும்
இயக்குனர்கள் பெயரிலும்
படங்கள் வெளி வந்த காலத்தில்
" இளையராஜாவின் இன்னிசையில் "
படங்கள் வந்து சக்கை போடு போட்டது..
சிம்பொனி இசை அமைத்த சிகரமே
சப்த ஸ்வரம் கற்ற ஏகலவ்யனே
ராக தாளம் நாட்டியமாடும் ராகதேவனே
எங்கள் மேஸ்ட்ரோ ராசாவுக்கு இனிய
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..
02.06.17 அன்று 74 ஆவது பிறந்த நாள்
கண்ட எங்கள் இசைஞானி இளையராஜாவின் பாதங்களில்
எனது இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன்.
இனிய இரவு வணக்கம்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ.பாலா
03.06.17..
No comments:
Post a Comment