தில்லை பெருவிழா
அதிகாலை வேளையிலே
அதிர்வேட்டு முழங்கிடவே
அம்பலத்தை விட்டு அவன்
வருகிறான்
அம்மை சிவகாமியோடு
ஆனந்த நடனம் போட்டு
ஆடியபடி முன்னும் பின்னும்
வருகிறான்
தில்லைவாழ் அந்தணர்கள்
தீபாராதனை காட்டும் வேளை
தேஜோமயமாய் தரிசனமும்
தருகிறான்
தீட்ஷிதர்கள் தோள் கொடுக்க
தள்ளுமுள்ளு கூட்டம் நடுவில்
தேர் மீது உலா வரவே அவன்
வருகிறான்
பிட்டுக்கு மண் சுமந்த நம்
பெருமான் பிராட்டியுடன்
பிரகாரத்தை வலம் வந்து
அருள்கிறான்
மக்கள் வெள்ளத்திலே
மங்கள வாத்தியம் ஒலிக்க
மகேஸ்வர மூர்த்தி இன்று
வருகிறான்
நம் குறைகளை களையவே
நான்கு வீதியும் உலா வந்து
நடராஜ ராஜன் பவனியும்
வருகிறான்
சாயந்திர நேரத்திலே
செம்படவர் சீரும் ஏற்று
சந்தோஷமாய் தேரடிக்கு
வருகிறான்
மாலை நேர பூசை ஏற்று
மண்ணாதி மன்னன்
மீண்டும் மாடவீதியை விட்டு
வருகிறான்
அம்மையோடு அய்யனும்
அடியவர்க்கு காட்சி தந்து
ஆயிரங்கால் மண்டபத்துள்
வருகிறான்
அர்ச்சனை முடிந்த பிறகு
ஆரத்தியும் முடிந்த பிறகு
அம்பலவன் அபிஷேகம்
ஏற்கிறான்
பாலும் தேனும் இளநீருடன்
பன்னீரும் சந்தனமும் கூடி
புஷ்ப அபிஷேகமும் அவன்
ஏற்கிறான்
பஞ்சமூர்த்தி வீதி உலா
பாங்குடனே முடிந்துமே
பக்தியோடு ரகசியத்திற்கு
பூசையும் முடிவடையும்
சர்வாபரணங்கள் தரித்து
சடைமுடி மேல் வில்வத்துடன்
சபாநாயகர் சிவகாமியுடன்
சித்சபைக்கு செல்கிறான்
விண்ணதிர வேட்டு சத்தத்துடன்
வேத கோஷங்களும் முழங்க
வஞ்சியோடு ஆடியபடி அவனும்
செல்கிறான்
பக்தர்களுக்கு அருள் வழங்கிய
பத்து நாள் பிரமோற்சவமும்
பிரமாதமாக கொடியிறக்கத்துடன்
நிறைவடையும்..
நாளை 20.06 தேர்த் திருவிழா
மறுநாள் 21.06 தரிசன உற்சவம்
தில்லைக்கு செல்வோம்
திருநடனம் காண்போம்
மானாட மழுவாட
மதியாட புனலாட
மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட
மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு
கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட
தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு
இந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நுரை தும்பை யறுகாட
நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினை ஓட உனைப்பாட
எனை நாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனை ஈன்ற தில்லைவாழ்
நடராஜனே...
"" சம்போ மகாதேவா
ஹர ஹர மகாதேவா
நடராஜா நடராஜா
சித்சபேசா சிவ சிதம்பரம் ""
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19.06.18
பூமாலையிட்டு பூசிப்போர் மத்தியில்
பாமாலை இட்டு பாலன் பூசிப்பான்.