நடுத்தர குடும்பம்
மாதக் கடைசியிலே
மளிகை தவனையிலே
குடும்பத்தை நடத்தி வரும்
சராசரி மனிதர்களாம்..
பொருட்களை திட்டமிட்டு
அட்டையில் நோட்டமிட்டு
வரிசையில் வாங்குகின்ற
வாடிக்கையாளர்களாம்..
அங்காடிக்கு சென்று நாங்கள்
அசந்து போய் பார்ப்பதில்லை
அண்ணாச்சிக் கடையே எமது
அடுப்பங்கரைக்கு சொந்தமாகும்..
வாங்குகின்ற ஊதியத்தில்
வட்டியெல்லாம் கழிந்த பின்னே
மிச்சப் பணத்தைக் கொண்டு
மிடுக்காக வாழ்ந்திடுவோம்..
அரசுக்கு நாணயமாய்
வரியும் செலுத்திடுவோம்
ஆண்டு முழுமைக்கும்
வறுமையில் வாடிடுவோம்..
விலைவாசி ஏற்றத்திலே
விழிபிதுங்கி நின்றிருப்போம்
வியர்வையை வழித்தபடி
வேலையும் செய்திடுவோம்..
கார் பைக் என்று எம்மிடம்
சுற்றிவர வசதி இல்லை
பொதுப் போக்குவரத்தே
போதுமானதாயிருக்கும்..
கையேந்தி நிற்பதில்லை
கடன் கேட்டு செல்வதில்லை
இருக்கும் பொருள் கொண்டு
இல்லத்தை நடத்திடுவோம்..
பணத்தை சேர்த்து வைத்த
பகட்டான வாழ்வு இல்லை
பசிக்கையில் வயிறு நிரப்பி
பண்போடு இருந்திடுவோம்..
நடுத்தர குடும்பம் என்று
நாட்டில் எமையுரைப்பர்
நல்லவர்களென்றும் கூட
நயமாய் எடுத்துரைப்பர்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
30.04.18