அநியாயம் அக்கிரமம்
அற்ப அரசியல் ஆதாயம் வேண்டி
அஸ்திவாரத்தையே அசைத்திடுவர்
அநியாயமாய் மக்களைத் தூண்டி
ஆசை வார்த்தையால் புளுகிடுவர்..
சில்லரை கட்சிகள் பலவும் இன்று
சிறுபான்மை சமூக காவலனாம்
நித்தம் பிரச்சினை கையிலெடுத்து
நாட்டினில் கட்சி நடத்துகின்றார்..
வெளியில் இருக்கும் எதிரிகளை விட
வீட்டினுள் உள்ள எதிரியால் ஆபத்தாம்
இனக்கிளர்ச்சியில் இன்புறுவோரை
இனங்கண்டு ஒழித்திட நிம்மதியாம்.
உச்சி மரக்கிளையின் மீது அமர்ந்து
அடிமரத்தை வெட்டும் மூடனைப் போல
வெளிநாட்டு சதிக்கு கைக்கூலியாகி
தாய்நாட்டிற்குள் கலகம் செய்கின்றார்..
நித்தம் ஒரு சாதிக் கலவரம்
நித்தம் ஒரு இனக் கலவரம்
ஊழல் செய்யும் அரசியல்வாதிகள்
ஒளிந்து கொள்வது அக்கிரமம்..
திரையில் நடிக்கும் மனிதர்கள் கூட
திரை மறைவு வேலை செய்கின்றார்
பாழாய்ப் போன படத்தினை ஓட்ட
பாமர சனத்தினை தூண்டுகின்றார்..
உண்மை உரைக்கும் செய்திகளை
ஊடகங்கள் மறைத்து விடுகின்றன
ஊழலில் திளைக்கும் அரசியலுக்கு
உறுதுணையாக இருக்கின்றன..
அண்டை நாடுகள் அறிவியல் துறையில்
ஆகாயத்தைத் தொட துடிக்கின்றன
அநியாய அரசியல் நடத்துவோர்கள்
அமைதியை குலைக்க முயல்கின்றன..
ஆங்கில ஆட்சியை விரட்டியடிக்க
தம் இன்னுயிர் ஈந்த வீரபூமி அன்று
அடிமைப்படுத்தி அதில் சுகம் காணும்
அரசியல் கட்சிகளின் பூமி இன்று..
பெயரை மறைத்து வேஷம் போட்டு
மக்களை ஏமாற்ற முயலுகின்றார்
பெரியார் பெயரை இன்னமும் கூவி
மத சாதி கலவரத்தை மூட்டுகின்றார்..
க்ஷேமமாயுள்ள சிறுபான்மையினரை
சஞ்சலப்படுத்தி முடுக்குகின்றார்
இந்து விரோத கொள்கையைக் கொண்டு
கோட்டையைப் பிடிக்க முயலுகின்றார்..
அமைதியாய் இருப்பது மூடத்தனமல்ல
அடங்கி இருப்பதும் கோழைத்தனமல்ல
நல்லிணக்கத்தோடு நாம் இருப்பது
நயவஞ்சகர்களுக்கு பிடிப்பதில்லை..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
25.10.17
No comments:
Post a Comment