நாயகனின் பயணம்
நாடாளும் ஆசையில்
நாயகனின் பயணம்
மதுரையில் துவங்குகின்ற
மருதநாயகத்தின் பயணம்..
நடிகனைப் பார்க்க இந்த
திரளும் கூட்டம் அவரைத்
தலைவனாக்குமா அந்த
தேர்தல் முடிவிலே தெரியும்..
திரையில் கொடிகட்டிய
தேவர் மகனே எம் மக்களுக்கு
உனை நினைத்தாலே இனிக்கும்
உன்னைப் பார்த்தாலே பரவசம்..
தமிழகத்தின் தசாவதாரமே
பாரதத்தின் பஞ்சதந்திரமே
மக்களைக் கவர்ந்த மகராசன் நீ
வேட்டையாடு விளையாடு..
ஆடு புலி ஆட்டம் ஆட வரும்
சிங்கார வேலனே உமக்கு
இளமை ஊஞ்சலாடுகிறது
சிப்பிக்குள் முத்து வருகிறது..
கருப்பு சட்டைகளுடன்
கை கோர்க்கும் உம்மை
கழகமும் கவனத்துடன்
கண்காணிப்பு செய்யும்..
காவியை எதிர்த்து வரும்
களத்தூர் கண்ணம்மாவை
நாத்திகத் தலைவர்கள் மிக
நம்பிக்கையுடன் பார்ப்பர்..
கொதித்தெழுந்த குருதிபுனலே
உயர்ந்த உள்ளம் உமக்கென்றும்
உன்னால் முடியும் தம்பி என்றும்
ஊரெல்லாம் எதிர்ப்பார்க்குது..
தில்லியின் திடீர் முதல்வரை
தோழனாக சேர்த்துக் கொண்டு
தமிழகத்து அரியணையை
தாகத்துடன் பார்க்கின்றீர்..
ஆளவந்தான் இவன் நமை
ஆள வந்தான் என்று உமது
உடன் பிறப்புகள் எல்லாம்
உற்சாகமாய்க் கூறும்..
விருமாண்டியே நடிப்பில்
உன்னைப் போல் ஒருவன்
திரையுலகிலில்லை என்பது
தெளிவான நிஜமாகும்..
நானும் ஒரு தொழிலாளி என
களம் இறங்கும் இந்தியனே
சாணக்கியனாய் நீர் சிந்தித்தால்
வேலு நாயக்கருக்கு வெற்றியே..
அரசியலை உற்று நோக்கும்
ராஜ பார்வையே, நண்பரின்
ஆன்மீக அரசியலையும் சற்று
சிந்தனையில் கொள்ளுங்கள்..
அபூர்வ ராகமாய் இன்று
அரசியலுக்குள் வரும்
அவ்வை சண்முகிக்கு
அரங்கேற்றம் நிகழுமா..
புன்னகை மன்னனே
சிகப்பு ரோசாவே நீர்
மூன்றாம் பிறை ஆவீரா
மகாநதியாய் மாறுவீரா..
மக்கள் நீதி மய்யம் என்று
வித்தியாசமாய் பெயரிட்டு
அரசியல் கட்சிக்கு புதிதாய்
ஆச்சாணி இட்டுள்ளீர்..
சகலகலா வல்லவனே இன்று
சத்யாவின் சலங்கை ஒலிக்கும்
நிழல் நிஜமாகிறது உம்மை
நினைத்தாலே இனிக்கும்..
இன்னும் எவ்வளவோ நான்
சத்யாவைப் பற்றி பலவிதமாய்
சொல்லத்தான் நினைக்கிறேன்
சூரசம்ஹாரமே..
விஸ்வரூபம் எடுக்கும்
வெற்றி விழா நாயகன்
வெல்வாரா வீழ்வாரா என
பொறுத்திருந்து பார்ப்போம்..
வாழ்க வளர்க 👍👍👍💐💐💐
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.02.18
No comments:
Post a Comment