ராமாவதாரம்
ஆரியன் ராமன் என்று
அந்நியப்படுத்துவதுண்டு
தமிழன் இராவணனை
தண்டித்தான் என்பதுண்டு.
வைணவ வழி தோன்றல் என்றும்
சைவ வழி இலங்கேசனை அன்று
காரணம் ஏதுமில்லாமல் இவன்
கடுமையாய் கொன்றான் என்பர்.
தந்தை சொல் பேச்சு கேட்டவனாம்
தர்ம நெறி தவறா வாழ்ந்தவனாம்
ஏக பத்தினி விரதமும் ஏற்றவனாம்
எதிரிக்கும் அடைக்கலம் தந்தவனாம்.
ஆரண்யத்திலே அசுரரை அழித்து
சாது முனிவர்களை காத்தவனாம்
வாலியை வதைத்து வஞ்சியை மீட்டு
சுக்ரீவனிடத்தில் கொடுத்தவனாம்.
சபரியின் உபசரிப்பு ஏற்றவனாம்
அகலிகை மோக்ஷம் தந்தவனாம்
ஜடாயுவுக்கு ஸ்ரார்த்தம் செய்து
ஜென்ம விமோசனம் தந்தவனாம்.
அசுர ராஜனோடு போரிடும் முன்னர்
ஆஞ்சநேயனை தூதனுப்பினவனாம்
சரணாகதி கேட்ட விபீஷணனையும்
சகோதரனாய் ஏற்றுக் கொண்டானாம்.
இன்று போய் நாளை வா என்று
இலங்கேஸ்வரனுக்கு போரில்
இறுதியாய் வாய்ப்பொன்றும்
இன்முகத்துடன் அளித்தவனாம்.
விஜயம் பெற்றவுடன் லங்கையை
விபீஷணன் வசம் தந்தவனாம்
பழிச்சொல் தீர்க்க பத்தினியை
அக்கினி புகவும் செய்தவனாம்.
அரசன் என்பவன் பொதுவானவன்
ஆட்சியை காக்கும் பொறுப்பானவன்
குடிமகன் பேச்சிற்கு மதிப்பு அளித்து
குடும்பத்தைக் கூட துறந்தவனாம்.
மூத்த சகோதரனாய் முன்னே நின்று
மூன்று தம்பிகளையும் காத்தவனாம்
இராம ராஜ்ஜிய பரிபாலனம் செய்து
இரகு வம்சத்தின் புகழ் சேர்த்தவனாம்.
திரித்து பேசுவோரே நீங்கள்
தசரதராமன் கதையும் கேட்பீர்
திரேதாயுகத்து அவதாரமான
திருமாலின் பதமும் பணிவீர்..
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
25.03.18
No comments:
Post a Comment