தமிழ் மறை
மறையோதும் எண்ணம் கொண்டு
மனப்பாடம் செய்து பார்த்தேன், வேத மறையோதும் எண்ணம் கொண்டு
மனப்பாடம் செய்து பார்த்தேன்.
மனதிற்குள் பதியவில்லை, வரிகள்
மூளைக்கும் புரியவில்லை, எனது
மனதிற்குள் பதியவில்லை, வரிகள்
மூளைக்கும் புரியவில்லை.
பாடசாலையில் பயின்றிருந்தால்
வேதியராய் இருந்திருப்பேன், வேத
பாடசாலையில் பயின்றிருந்தால்
வேதியராய் நான் இருந்திருப்பேன்.
நான்மறையும் நாவாலே நித்தமும்
நன்றாக ஜெபித்திருப்பேன், நானும்
நான்மறையும் நாவாலே நித்தமும்
நன்றாக ஜெபித்திருப்பேன்.
கலக்கம் மிக கொண்டேன், எங்ஙனம்
கடவுளை நான் தொழுவேன், ஐயகோ
கலக்கம் மிக கொண்டேன், எங்ஙனம்
கடவுளை நான் தொழுவேன்,
ருத்ரமும் சமகமும் சூக்தமும் அறியாது
பூசனை எவ்வாறு செய்வேன், சிவனை
ருத்ரமும் சமகமும் சூக்தமும் அறியாது
பூசனை எவ்வாறு நான் செய்வேன்.
வடமொழி அறியாத வேதனையகல
தமிழ்மறையை பற்றிக்கொண்டேன்
வடமொழி அறியாத வேதனையகல
தமிழ்மறையை பற்றிக்கொண்டேன்.
தேமதுர தேவார திருவாசக வரிகளை
தினமும் நெக்குறுக படிக்கலானேன்
தேமதுர தேவார திருவாசக வரிகளை
தினமும் நெக்குறுக படிக்கலானேன்.
நால்வர் அருளிய பாக்கள் யாவும்
நன்மறைகளுக்கு ஈடாய் கூறலாமே
நால்வர் அருளிய பாக்கள் யாவும்
நன்மறைகளுக்கு ஈடாய் கூறலாமே.
உலகெலாம் என்று அடியெடுத்தருளி
உலகிற்கு சேக்கிழார் மறை தந்தார்
உலகெலாம் என்று அடியெடுத்தருளி
உலகிற்கு சேக்கிழார் மறை தந்தார்.
ஆயிரங்கால் மண்டபத்தில் அன்று
அரங்கேற்றம் செய்தார், தில்லையில்
ஆயிரங்கால் மண்டபத்தில் அன்று
அரங்கேற்றம் செய்தார்,
நடராஜப் பெருமானை நாவாலே பாட
நலம் யாவும் பயக்கும், ஆனந்தமாய்
நடராஜப் பெருமானை நாவாலே பாட
நலம் யாவும் பயக்கும்.
அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும்
மாணிக்கவாசகரும் போற்றி
அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும்
மாணிக்கவாசகரும் போற்றி.
" வான் முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க
நல்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகம் எல்லாம் "
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
16.06.18
No comments:
Post a Comment