இறை வழிபாடு
சமீபத்தில் ஆலயத்திற்கு சென்ற பொழுது கவனித்த மற்றொரு விஷயம் மனதை மிகவும் பாதித்தது.
பத்தில் ஒன்பது பேர் கைப்பேசியும் காதுமாக சுற்றி வந்து கொண்டிருந்தனர். மன அமைதிக்காக கோவிலுக்கு வந்தும், ஐந்து நிமிடம் கூட இறைவனோடு இணையாமல் இப்படி இயந்திரத்தோடு பிணைந்து கிடப்பதைக் காணுகையில் கவலையாக உள்ளது.
பக்தர்கள் மட்டுமல்லாது, பூஜை செய்யும் அந்தணர்களும் நொடிக்கு நூறு முறை சிணுங்கும் செல்லினை எடுத்து செல்லமாய் பேசியபடி திரிந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது நெஞ்சு பதைப்பதைக்குது. வாய் நிறைய மந்திரங்கள் உச்சரித்த காலமும், வேத புத்தகங்களைப் படித்து உரு போட்ட காலமும் மறைந்து குழுவாக ஆங்காங்கே அமர்ந்து செல்லில் chat சேட்டை செய்தபடி அமர்ந்திருந்தனர்.
சில வயதான புரோகித பெருமக்கள் அக்காட்சியைக் கண்டு மனம் வெதும்பி தலையில் அடித்துக் கொண்டு கடந்து சென்றதை கண்கூடாக காண நேர்ந்தது. எடுத்துச் சொன்னால் எதிர்த்துப் பேசிடுவர் என்று அமைதியாக கடந்து சென்றனர். காலக் கொடுமை என்று தான் கூற வேண்டும்.
இந்நிலை மாற வேண்டும். நிம்மதியை நாடி ஆலயத்திற்குள் வந்து அமைதியைத் தொலைத்து அலைய வேண்டாமே. மனதை அலையவிட்டு மணிக்கணக்கில் கோவிலை சுற்றி வருவதால் ஒரு பிரயிஜனமும் இல்லை பத்தே நிமிடங்கள் ஆயினும் எந்த சஞ்சலமும் இல்லாமல் இறைவனோடு இணைந்து விடுவதே நலம் பயக்கும்.
இனியாவது செல்போனை அணைத்துக் கொண்டு திரியாமல் மொத்தமாக அதனை அணைத்துவிட்டு கடவுள் தரிசனம் செய்ய உறுதி பூணுவோம்.
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
14.10.18
No comments:
Post a Comment