எம் தந்தை
கதராடையை உடுத்தி
காந்தி வழி சென்ற மகான்
வெள்ளை ஆடையைத் தவிர
வேறெதுவும் தரித்ததில்லை.
உடன் பிறந்த மக்களோடு
ஒற்றுமையாய் கூடி நின்றார்
அறுவர் எமைப் பெற்றெடுத்து
அன்புடனே காத்து நின்றார்.
தம் தந்தை வழி தானும் சென்று
தரமான வாழ்க்கை கொண்டு
தன் சந்ததிக்கோர் சான்றாக
தரணி போற்றும் தகப்பன் அவர்.
ஈகை குணம் நிறைந்தபடி
இயன்றளவு தொண்டு செய்து
உள்ளத்தில் உயர்ந்தவராய்
ஊர் மெச்சிட வாழ்ந்து வந்தார்.
காந்தி மன்றத்திலே
காலமெல்லாம் தொண்டாற்றி
ஏழை மக்களை என்றும்
அரவணைத்துப் போற்றியவர்.
வடமொழியில் வல்லவராய்
இந்தியிலே பண்டிதராய்
அரை நூற்றாண்டாய் கற்பித்த
ஆசிரியப் பெருமகனார்.
இராமகிருஷ்ணா வித்யாசாலா
இராமன் ஹிந்தி வித்யாலயம் என
இறுதி மூச்சு இருந்த வரைக்கும்
இயங்கி வந்த திருமகனார்.
அவதூத ஸ்வாமிகளுக்கு
அக்ரஹார வனத்தினிலே
ஆலயம் அமையச் செய்த
ஆதர்ஷ மனிதர் அவர்.
காஞ்சி மடத்தின் கீழ்
கல்விக்கூடம் துவங்கச் செய்து
ஓரியண்டல் பள்ளி என்று
உருவாக்கம் தந்த வள்ளல்.
குருவைய்யர் வீதியிலே
கொலுவிருக்கும் கணபதியை
கடைசி மூச்சு உள்ளவரைக்கும்
பூஜிக்கும் பேறு பெற்றார்.
எம் தந்தையைப் பற்றி எமக்கு
தோன்றிய சில வரிகள் 🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
No comments:
Post a Comment