என் அம்மாவின் பிறந்த நாள்
எவரை ரொம்ப பிடிக்கும்
எனும் கேள்வி கேட்டால்
எல்லோரும் சொல்லுவது
அம்மா எனும் உறவையே.
அகிலத்தில் பிறந்ததுமே
அனைத்து சேய்களும்
முதன் முதலில் பார்ப்பது
தாயெனும் உயிரையே.
அனைத்தும் துறந்து விட்ட
ஆதி சங்கர பகவத் பாதாள்
அந்திமக் கிரியை செய்தது
அம்மா எனும் உறவிற்கே.
பந்த பாசம் அறுத்து விட்டு
பரதேசியான பட்டினத்தார்
ஈமக்கிரியை செய்ய வந்தது
ஈன்றெடுத்த அன்னைக்கே.
மாதா பிதா குரு தெய்வம்
வரிசையிட்டு வைத்தாலும்
முதல் மரியாதை எப்பவும்
வயிற்றில் சுமந்த தாயிற்கே.
அம்மா சொன்ன பின்னரே
அப்பன் யாரெனத் தெரியும்
அம்மா வளர்க்கும் விதத்திலே
அனைவர் வாழ்வும் அமையும்.
பஞ்சு மெத்தையை விடவும்
பெற்றவளின் புடவை தான்
பிஞ்சு குழந்தைக்கு என்றும்
போதுமான இதத்தைத் தரும்.
பெண் குழந்தைகளைப் பெற்று
பயந்தபடி நீ இருந்தாய் பையன் பிறந்தானென்றதும் பேரானந்தம்
அடைந்து போனாய்.
அன்று அடைந்த ஆனந்தம்
இன்றளவும் இருக்கிறதே
என்னை இன்று நீ பார்த்தாலும்
அந்நாளின் பாசம் தெரிகிறதே.
பிறந்த நாள் வாழ்த்து கூறி
பொதுவாக இருக்க மாட்டேன்
எந்நாளும் உன் நலம் வேண்டி
பிரார்த்திக்க மறக்க மாட்டேன்.
🌷🌷🌷🌹🌹🌹🌻🌻🌻🌹🌹🌹
அம்மா உனது ஆசிகளுடன்,
அன்பு மகன் பாலு...
No comments:
Post a Comment