இனியதொரு பொன்
மாலைப்பொழுதில்
சிறிதாகப் பெய்யும்
மழைநீர்த் துளிகள்..
நிலத்தில் விழுந்திடும்
நீரினால் எழுந்திடும்
மண்வாசனைக்கு
ஈடு இணை இல்லை..
ஈர மண்ணும் கூடவே
சில்லென்ற காற்றும்
மனதிற்கு மிகவும்
மகிழ்ச்சியைத் தரும்..
தாகம் தீர்த்திட
தண்ணீர் தேவை
தாவர வகை வளர
மழைநீர் தேவை..
நீரும் நெருப்பும்
காற்றும் நிலமும்
ஆகாயத்தின் கீழே
உயிர் வாழத் தேவை..
இயற்கையோடு ஒன்றாய்
இணைந்த வாழ்க்கை
இறைவன் நமக்களித்த
நன்கொடை ஆகும்..
பச்சை காய்கறிகள்
பழவகைகள் யாவும்
படைத்தவன் அருளினால்
பயிர் விளைகின்றன..
பசியைப் போக்கிடும்
தானிய வகைகளும்
மண்ணில் இருந்தே
விளைகின்றது..
மானம் காத்திடும்
துணிமணி நெய்ய
பருத்தியும் நிலத்தில்
கிடைக்கின்றது..
ஆறறிவு கொண்ட
மனிதன் தனக்கு
வசதியைப் பெருக்க
ஆசை கொண்டான்..
ஆண்டவன் அருளிய
இயற்கையை அழித்து
செயற்கை சுகத்திற்கு
அடிமையானான்..
மண் வளம் அழிந்து
மாசு பட்ட காற்றுடன்
நீராதாரமும் நிறையவே
குறைந்தது..
மரங்களை வெட்டி
வீட்டினைக் கட்டினோம்
வளங்களை அழித்து
வசதியைக் கூட்டினோம்..
உலகின் தட்பவெப்பத்தில்
மாற்றங்கள் நேர்வது
பின்வரும் சந்ததிக்கு
பேராபத்தில் முடியும்..
மரங்களை நடவவும்
மழை நீரைத் தேக்கவும்
மண்வளத்தைக் காக்கவும்
உறுதி ஏற்போம்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
08.10.17
(மாலை நேரத்தில் சுகமாய் காபி அருந்தியபடியே, பெய்த மழை நீரை
கண்டு ரசித்து எழுதிய கவிதை வரிகள்)
No comments:
Post a Comment