பிண்ட போஜனத்தில்
பெருமிதம் அடையும்
பித்ரு தேவர்களின்
புண்ணிய தினமாம்..
அகிலத்திற்கு நம்மையளித்த
அன்னையும் பிதாவும் தமது
ஆயுசு முடிந்தும் பித்ருக்களாகி
அரவணைத்துக் காப்பர்..
தர்ப்பைப் புல்லிலே ஆவகித்து
எள்ளும் நீரும் கூடவே சேர்க்க
திருப்தியடைந்து தெய்வ ரூபமாய்
நம்மை என்றும் காத்தருள்வர்..
அமாவாசை தினத்தன்று
ஆச்சாரத்தோடு நாம்
காக உருவில் வீட்டைச் சுற்றும்
பித்ரு தேவர்க்கு அன்னமிடுவோம்..
மூன்று தலைமுறையினர்க்கு
தர்ப்பணமும் வார்த்திட நமது
ஏழு தலைமுறைகளை அவர்கள்
ரக்ஷித்து அருள்வர்..
கோவில் குளங்கள்
திரியவும் வேண்டாம்
நித்தம் ஜபமாலையை
உருட்டிட வேண்டாம்..
பெற்றோரை வணங்கி
பூசையும் செய்திட
பரமனும் மகிழ்ந்து
பாபத்தை தீர்ப்பர்..
அன்னையும் பிதாவும்
அகிலத்தின் சாட்சியென
மாம்பழக் கதை மூலம்
மகேசனும் உரைத்தார்..
வாழும் காலத்தில் அவர்க்கு
சேவையும் புரிந்து பின்னர்
விண்ணுலகம் சென்றதும்
பித்ரு பூசையும் புரிவோம்..
தாய் தந்தையரை வணங்கி நிற்றலும்
குலதெய்வ பூசையைக் கைவிடாதலும்
தெய்வ வழிபாட்டினைக் காட்டிலும்
மிக்க மேன்மையாகும்..
சந்ததி செழித்திட
சௌபாக்கியம் பெற்றிட
பித்ருக்களை மகிழ்வித்து
பேரருளைப் பெறுவோம்..
"தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை"
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
18.11.17
No comments:
Post a Comment