கண்மணியே
வெள்ளைத் தோலுக்கே
மவுசு கூடியிருந்த போது
மாநிறமாய்ப் பிறந்திருந்தும்
மாநிலம் தாண்டி வென்றாயே..
பள்ளிக்கு சென்றதில்லை
பாடங்களும் பயின்றதில்லை
நுனி நாக்கில் ஆங்கிலமும்
நாவில் நவின்றதில்லை..
பம்பாய்க்கு வரும் போது
ஹிந்தியும் தெரிந்ததில்லை
பாலிவுட்டை ஆக்கிரமிக்க
துணிவோ குறைந்ததில்லை..
முதல் பாதியில் இவள்
கோலிவுட்டில் கோலோச்சி
பிற்பாதியில் மிடுக்காய்
பாலிவுட்டில் நடையிட்டாள்..
ஐம்பது ஆண்டுகளுக்குள்
முன்னூறு திரைப்படங்கள்
பல்வேறு மொழிகளிலும்
பதவிசான பாத்திரங்கள்..
நடிகர்களுக்கு நிகராக
நடிகைக்கும் பெயர் தந்த
நல்ல பல திரைப்படங்கள்
நாயகியே உனக்கு கிட்டியது..
அழகிற்கு அழகூட்ட நீ செய்த
அறுவை சிகிச்சைகள் உன்
ஆயுளை அபகரித்துள்ளதை
அறிவாயோ கண்மணியே ?
வானத்து நிலவும் கூட
மாதத்தில் தேய்வதை நாம்
இயற்கையின் நியதியென
ஏற்கத்தான் செய்கிறோம்..
திரைவானில் ஜொலிக்கும்
நட்சத்திரத்தின் பொலிவும்
வயதான பின்னே தொய்வதை
ஏற்க மறுக்கிறோம்..
இயற்கைக்கு மாறாக
செயற்கையை நாடிடவே
ஏற்படும் விளைவுகள்
பேரிழப்பைத் தந்திடும்..
அழகுப் பதுமைகளாக மட்டும்
பெண்களைக் காணும் வரையில்
இம்மாதிரி இழப்புகள் தொடர்ந்து
இருக்கவே செய்யும்..
வருத்தத்துடன்,
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
26.02.18
No comments:
Post a Comment