ஜடா விநாயகர்
தில்லை கோவிலிலே
சித்சபையும் இருப்பது
சற்று தள்ளியே என்பதை
அறிவோம்..
மையத்தில் இல்லாமல்
இருந்தாலும் கூட ஈசன்
வையத்தை ஆட்டுவிப்பதை
உணர்வோம்..
அக்ரஹார கோவிலில்
அவன் பிள்ளை கணபதி
அழகாக எழுந்தருளி
உள்ளான்..
தந்தையைப் போலவே
தனயனும் தள்ளியே
வீற்றுருக்க காண்பதும்
அழகாம்..
விளம்பி வருடத்தில்
விக்னேஸ்வரனுக்கு
விஷேஷமாய் பூஜை
நடக்கும்..
சித்திரைத் திங்களில்
சிவகாமி மைந்தனுக்கு
சிறப்பாக குடமுழுக்கு
இருக்கும்..
ஞாலத்தை இயக்குகின்ற
ஸ்ரீமத் ஜடா விநாயகருக்கு
ஞாயிற்றுக் கிழமையிலே
அபிஷேகம்..
ஞானத்தை அளிக்கின்ற
ஞானமூர்த்தியைக் காண
சிதம்பரத்திற்கு நாமும்
வருவோம்..
குருவைய்யர் வீதியில்
கும்பாபிஷேகம் கண்டு
கணபதியின் பாதம்
பணிவோம்..
பேருவகையோடு அன்று
பக்த ஜனங்கள் எல்லாம்
பிள்ளையார் கோவிலில்
ஒன்று கூடுவோம்..
பாடியும் ஆடியும்
பரவசமாகியும்
பரமானந்தமும்
பேறு அடைவோம்..
ஸ்ரீமத் ஜடா விநாயக மூர்த்திகி ஜெய்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.04.18
No comments:
Post a Comment