ஜடா விநாயகா
நந்தியாவட்டை
பூ வைத்து நித்தம்
நாங்கள் உனை
வழிபட்டோம்..
சிவந்த செம்பருத்தி
மலர் கொண்டும்
ஐயனே அன்று
அர்ச்சித்தோம்..
சிறு வயதில் பக்தியுடன்
பூசித்த நாட்களெல்லாம்
சிந்தனையில் அலையிட்டு
பசுமையாய் வருகின்றதே..
வெண் வஸ்திரம் தரித்து
கருஞ்சிலையின் அழகோடு
கண்டவர்கள் மயங்க செய்யும்
கம்பீர கணபதியாம்..
அலங்காரம் கண்டவர்கள்
அகங்காரம் தொலைத்திடுவர்
அக்ரஹார அய்யனே உனை தம்
அகத்தினுள்ளே இருத்தி கொள்வர்..
மலர் கொண்டு பூசித்து
மனமார மகிழ்ந்திடலாம்
வெண்ணெய் காப்பும் சாத்தி
உளமார உருகிடலாம்..
விபூதியால் அலங்கரித்து
உருக்கமாய் துதித்திடலாம்
சந்தன காப்பும் செய்து
சந்தோஷம் அடைந்திடலாம்..
எந்த அலங்காரமும் இல்லாது
ஏகாந்தமாய் பார்க்கையிலே
எல்லா இறை மூர்த்திகளையும்
என் ஐயனிடம் கண்டிடலாம்..
தீக்ஷித பெருமகனார்
திவ்யமாய் பூசிக்க எம்
தேகத்தை இங்கு வைத்து
தியானத்த்தில் உனை வைத்தோம்..
குருவைய்யர் அக்ரஹாரம்
கொலுவிருக்கும் கணபதியால்
குவலயத்தின் பாகத்திலே விரைவில்
கோலோச்சும் நாள் வருமாம்..
ஜடா விநாயக மூர்த்திகி ஜெய்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.05.18
No comments:
Post a Comment