நினைவலைகள்
முற்றுப் பெறாத வாக்கியமாக
ஒவ்வொரு நாளும் நீ எனை
கடந்து செல்கையில் நித்தமும்
நான் உணர்கின்றேன்..
கடந்த காலத்து கற்பனை உலகில்
கால் நூற்றாண்டு வாழ்ந்தவைகள்
கண்ணே உனை நினைத்தபடியே
கன்னத்தினை நனைக்கின்றேன்..
உன்னையே நான் நினைத்து
உள்ளுக்குள்ளே தித்தித்து
ஊரைச் சுற்றி வந்த நாட்கள்
உள்ளமெல்லாம் நிறைந்திருக்கு..
கல்லூரி முடித்த பின்னே
கை நிறைய சம்பளத்தில்
கண்ணே நீ என்னை விட்டு
கடல் கடந்து சென்றனையே..
ஆண்டுகள் சில கழிந்து
ஆவலுடன் நான் காத்திருக்க
திருமண பத்திரிக்கை தந்து
திகைப்படைய செய்து விட்டாய்..
விளக்கொளியில் நீ படிக்க
வீதியிலே காவல் கொண்டு
விடியும் வரை சேவகித்தவை
வீணாகப் போனதடி..
மணம் வீசிய பின்னே
தூர எறியப்படுகின்ற
கருவேப்பிலையைப் போலே
என்னை நீ தொலைத்தனையோ..
சைக்கிளில் உனையேற்றி
ட்யூஷனுக்கு விட்ட நாட்கள்
சத்தமின்றி என் நெஞ்சில்
ஈட்டியாய் தைக்கின்றதே..
குமுதம் விகடன் என்று
மாதப் பத்திரிக்கைகள்
கண்மணிக்கு பிடிக்குமென
காசு கொடுத்து வாங்கி தந்தேன்..
அத்தனையும் மறந்து விட்டு
அன்பு அத்தான் என்னை விட்டு
அமெரிக்கா மாப்பிள்ளையை
அழகே நீ தேடிச் சென்றாய்..
இப்பவும் உன் வீட்டில்
ரேஷன் பொருட்கள் யாவும்
இளிச்சவாயனாக இன்னும்
வாங்கித் தருவேனடி..
உன் வீட்டின் கூடத்தில் உள்ள
உன் புகைப்படத்தை நோக்கிடவே
உயிரை சுமந்து கொண்டு வெறும்
உடல் கொண்டு திரிகின்றேன்..
எங்கிருந்தாலும் வாழ்க பாடல் காதில்
இனிமையாக இனிக்கும், ஆனால்
ஏமார்ந்து போன வலியோ மனதில்
கடுமையாக இருக்கும்..
மாமன் மகளைப் பறிகொடுத்த
மாடசாமியின் சார்பாக மடல்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
10.05.18
No comments:
Post a Comment