ஸ்ரீமூலநாதமே
ஒரு காலைத் தூக்கி
ஓங்கார வடிவத்தில்
ஓயாமல் ஆடுகின்ற
நடராஜா..
அடிமுடி காணவியலா
அகண்ட ஜோதியாகி
அண்டத்தில் வெளிவந்த
அண்ணாமலையே..
ஸ்ரீமூலநாதமே உன்
ஆதிமூலம், அதனுள்
சிவசக்தி ஸ்வரூபமாய்
இணைந்திருந்தாய்..
புலியும் பாம்பும்
தவமும் புரிந்திட
திருநடனமாடி இவ்
உருவம் கொண்டாய்..
அடியவர்க்கு அருளிட
அகமகிழ்ந்து உருகிட
ஆனந்த தாண்டவமும்
ஆடுகின்றாய்..
குஞ்சிதபாதத்தை நாம்
கோடி முறை கண்டாலும்
எப்போதும் தரிசிக்க நீ
ஏக்கம் வைப்பாய்..
சிவகாமியோடு சேர்ந்து
சிருங்கார நடனமாடும்
சபாபதியை சேவிக்க
சிதம்பரம் செல்வோம்..
நான்மாட வீதிகளை
நயமாக வலம் வந்து
நாயன்மார் வழிபட்ட
நடேசனைப் பணிவோம்..
ஆடிய பாதத்தை கண்டு
அனுபவித்து மெய்மறக்க
ஆயுசும் போதாது உனது
அடியவர்க்கு..
இலிங்க ரூபத்தில் இறைவா
நீ திவ்யமாய் இருந்தாலும் எம்
இதயத்தை ஆட்கொள்வது
நின் திருநடன ரூபமே..
அம்மைக்கு இடமளித்த ஐயனே
ஆலகால விடமுண்ட மெய்யனே
பிட்டுக்கு மண் சுமந்த பொய்யனே
பிறவா வரமருள்வாய் அப்பனே..
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
17.05.18
No comments:
Post a Comment