கொசு
கை வலிக்க உனையடித்து
கண்ணெரிய துயில் துறந்து
கொட்டாவி விட்டபடி தினமும்
படுக்கையில் புரள்கின்றேன்.
கண்ணிமைக்கும் நேரத்தில்
சட்டென்று நீ கடக்கின்றாய்
நறுக்கென்று கொட்டிவிட்டு
உதிரத்தை குடிக்கின்றாய்.
சுத்தமில்லாத இடத்தில் நீ
மொத்தமாக குவிகின்றாய்
சத்தமில்லாமல் கடித்து எம்
நிம்மதியை கெடுக்கின்றாய்.
காலை வேளையிலே
கவலையின்றி நாமிருக்க
மாலையானதுமே நீ உனது
வேலையினை துவக்குகிறாய்.
சிறு மழை பொழிந்தாலும்
சேறும் சகதியும் சேர்ந்தாலும்
செமத்தியான படையல் காண
சுறுசுறுப்பாய் இயங்கிடுவாய்.
டெங்கு மலேரியா சிக்கன்குனியா
யானைக்கால் போன்ற பலவித
கொடிய நோய்கள் உன்னுடைய
கடியின் மூலம் பரப்பிடுவாய்.
சிங்கம் புலி கரடியை விடவும்
சின்ன உயிரினம் நீ தான்
மிகவும் கொடிய விலங்கென்று
உரக்க உலகிற்கு கூறிடலாம்.
கார்காலத்தில் குஷியாகும்
ஆட்கொல்லியே எங்களை
கொல்லாமல் கொள்ளும்
உயிர்க்கொல்லியே..
ஈரெழுத்து நாமம் கொண்ட
எதிரியை விட அச்சுறுத்தும்
குட்டி பிசாசான கொசுவே நீ
எப்போது ஓய்ந்திடுவாய்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
21.07.2018
No comments:
Post a Comment