விநாயகர் சதுர்த்தி
தந்தத்தை உடைத்து
சந்தைப் படுத்தி மஹா
பாரதம் எழுதித் தந்த
பகவானே..
சிந்தையில் உனையிருத்தி
செய்யும் செயலனைத்தும்
ஜயமடையச் செய்வாய்
ஜடா விநாயகனே..
மங்களத்தை அருளிடும்
மஞ்சள் பிள்ளையார்
மன நிறைவை நல்கிடும்
மண் பிள்ளையார்..
மோதகத்தை ஏற்கும்
சதுர்த்திப் பிள்ளையார்
மனமகிழ்வு தந்திடும்
செல்லப் பிள்ளையார்..
பிடித்து வைத்திட நம்
பிள்ளையார் வருவார்
பிடித்து செய்யும் பிடிக்
கொழுக்கட்டை ஏற்பார்..
ஆர்ப்பாட்டமான பூஜைகள்
ஆனைமுகனுக்கு வேண்டாம்
அகங்குளிர அர்ச்சித்திட
அருகம்புல் போதும்..
ஆலயம் பெரிதாய்
எழுப்பிட வேண்டாம்
அரச மரத்தடியின் கீழ்
எழிலே போதும்..
அனைத்து பூசைக்கும்
ஆரம்ப பூசை போட்டு
அண்ணலைத் தொழுதிடவே
அனுக்கிரகமும் செய்வான்..
வள்ளியை மணம் புரிய
வேலனுக்கு உதவியவன்
முப்புரம் எரித்த போது
முக்கண்ணனுக்கும் அருளியவன்..
கணபதியைப் பற்றி அவன்
காலடியைப் பணிந்திடவே
கவலைகளைக் களைவான்
கருணை மழை பொழிவான்..
ஸ்ரீமத் ஜடா விநாயக மூர்த்திகி ஜெய்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
13.09.2018
No comments:
Post a Comment