என்னவளே
கருங்கூந்தல் அடர்த்தியுடன்
மை தீட்டிய கயல் விழியே
அம்பொத்த புருவத்துடன் நீ
அனைவரையும் ஈர்க்கின்றாய்..
நங்கூரம் போன்றதொரு
நச்சென்ற நாசியுடன்
முத்துப் பல் சிரிப்புடனே
செவ்வதரம் கொண்டவளே..
கன்னக் குழியதனில் உனைக்
காண்போரைக் கவிழ்க்கின்றாய்
கவனத்தையெல்லாம் சிதறடித்து
கட்டியணைக்கத் தூண்டுகின்றாய்..
சங்கு கழுத்தின் கீழ்
சரிந்த உன்னழகனிலே
சந்நியாசியையும் கூட நீ
சபலமடையச் செய்கின்றாய்..
இல்லாத இடையினையே
இங்குமங்குமாய் ஆட்டி
ஏனடி எங்களை நித்தம்
இம்சித்துக் கொல்லுகிறாய்..
வெட்டிய வாழை போன்ற
உன்னிரு தொடையழகை
விவரிக்க வார்த்தையில்லை
விக்கித்து நிற்கின்றேன்..
கெண்டைக் காலினிலே
கொலுசு ஒன்று கட்டியபடி
சின்னதாய் சப்தமிட்டு
சிலிர்த்தபடி நடக்கின்றாய்..
முன்னுக்கு பின்னும்
கீழுக்கும் மேலாக
எப்படி நோக்கினாலும்
ஏக்கமுற வைக்கின்றாய்..
வளர்ந்து பிறந்தவளா
பிறந்தபின் வளர்ந்தவளா
வியந்து நான் பார்க்கிறேன்
படைப்பினை வியக்கின்றேன்..
சத்திய லோகத்தில்
சரஸ்வதிக்கு கோபமாம்
உன்னைப் படைத்த பின்னே
நான்முகனுடன் சண்டையாம்..
தடாகத்து மீனைப் போல
துள்ளி நடை போடுகிறாய்
தங்கமே உனையடைவேன்
தவறாக எண்ணாதே..
தெருவினிலே நீ நடந்தால்
திரும்பிப் பார்க்கத் தோணுதடி
தெனாவட்டாய்ப் பார்க்கையிலே
தப்பு பண்ணத் தோணுமடி..
தாவணியில் திரிபவளே
சேலையும் வாங்கிடுவேன்
தாம்பூலம் பேசி முடித்து
திருமாங்கல்யம் கட்டிடுவேன்..
சும்மா ஒரு மாற்றுக்காக 😊😊
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
19.09.18
No comments:
Post a Comment