கண்ணாடி
கருப்பாகவே இருந்தாலும்
கன்றாவியாய் தெரிந்தாலும்
கண்ணாடி முன் நின்றால்
களையாகத் தோணுமடி..
என் வீட்டுக் கண்ணாடி
எப்பவும் எனை அழகாக்கும்
என்னைப் பொறுத்த மட்டில்
ஏக்கத்தை தீர்த்து வைக்கும்..
ரசம் போன கண்ணாடியை
ரசித்து நான் பார்த்திடுவேன்
தலை வாறும் நேரத்தில் நான்
தனியாய் எனை ரசித்திடுவேன்..
மீசையினை முறுக்கிக் கொண்டு
முன்னும் பின்னும் நோக்கிடுவேன்
முகத்தில் பவுடர் போட்டுக் கொண்டு
மைனர் போன்று மாறிடுவேன்..
கண்ணாடியே !!!
உன் முன்னாடி நிற்கையிலே
உள்ளத்தில் உன்மத்தம் ஆகுதடி
வயதான கிழடுகள் கூட சற்று
வாலிபராய் ஆவரடி..
யானையும் இரயிலும் என்றும்
பார்க்கத் திகட்டாதது போல்
கண்ணாடி உனைப் பார்க்க
அலுப்பும் தட்டாதாம்..
தண்ணீரில் முகம் பார்த்து
தலை சீவும் பழக்கமுண்டு
கண்ணாடி பார்த்த பின்னே
களைப்பை மறப்பதுண்டு..
அலமாரி வாங்கும் போது
ஆளுயரக் கண்ணாடியை
அழகாக வைத்து விட்டு
ஆளையே மயக்கிடுவர்..
மனிதனின் கண்டுபிடிப்பில்
முக்கியத்துவம் கண்ணாடிக்கு
நம்மையே நாம் ரசிக்காவிடில்
நரகமாகும் நம் வாழ்க்கையடி..
மூக்குக் கண்ணாடியில் நம்
பார்வைத் தெளிவாகும் முகம்
பார்க்கும் கண்ணாடியில் மனப்
பார்வைத் தெளிவாகும்..
கண்ணாடியைப் பார்த்தபடி
கவிதைப் படைத்துள்ளேன்
கற்பனையை சற்று கூட்டி
கருத்தையும் கூறியுள்ளேன்..
கண்ணாடியை காதலியுங்கள்
கவலையினை மறந்திடுங்கள்
ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
23.09.18
No comments:
Post a Comment