நவராத்திரி கொலு
ஒற்றை இலக்கத்தில்
படி வைத்து அடுக்கிட
ஒருநிலைப் படுத்தும்
மனநிலை அறியலாம்..
பத்து நாள் வைபவத்தில்
பாங்குடன் பொம்மைகளை
படிகளில் அலங்கரித்து
பரவசம் அடையலாம்..
பா மாலை பாடியும்
பூ மாலை சூட்டியும்
பொம்மை தெய்வங்களை
போற்றி வணங்கலாம்..
குட்டிச் சுட்டிகளுக்கு
கொண்டாட்டம் இந்நாளில்
தினம் ஒரு தினுசாய்
சுண்டலும் சுடச் சுட..
அக்ரஹாரங்களில் கொலு
அமர்க்களமாய் இருக்கும்
அக்கம்பக்கத்தினரை இது
அரவணைத்து சேர்க்கும்..
பத்து தலை இராவணன்
பஞ்ச பாண்டவ பொம்மைகள்
தசாவதார பெருமாள்கள்
தவறாது இடம் பெறுவர்..
தலையாட்டும் செட்டியார்
தாம்பூல தட்டு கூடைகள்
கல்யாண சீர்வரிசையும்
கண்ணிற்கு அழகு தரும்..
பூங்கா அமைத்து கூடவே
வண்ண விளக்குகளுடனே
விதம் விதமாய் அழகு பெறும்
நவீன கலை விழா..
மைசூரு அரண்மனையின்
பிரம்மாண்ட பெருவிழா
குஜராத் மாநிலத்தின்
கோலாகலத் திருவிழா..
முப்பெரும் தேவியரின்
முத்தாய்ப்புத் திருவிழா
நங்கையர் பூஜிக்கும்
நவராத்திரி பெருவிழா..
நவராத்திரி நந்நாளில்
முப்பெரும் தேவியரை வணங்கி
பத்து நாள் கொலுவும் வைத்து
பிரமாதமாய் கொண்டாடுவோம்..
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
No comments:
Post a Comment