சர்கார்
நடிகன் ஒவ்வொருவனுக்கும்
நாளையே முதல்வர் ஆகிடும்
கனவு மேலோங்கி வருகிறது.
ஆரம்ப காலத்தில் நாயகியோடு
மரத்தைச் சுற்றி பாட்டு பாடிவிட்டு
திடீர் ஞானோதயம் ஏற்பட்டதால்
நாட்டிற்கு தலைவனாகி விடுவராம்.
தனி மனிதனாக களத்தில்
நின்று அனைவரையும்
எதிர்த்து நிற்பாராம் இவர்
ஊழல் பெருச்சாளிகளைப்
பிடித்து போடுவாராம்..
ஒவ்வொரு படமும்
வெளிவரும் நேரம்
ஊடகத்தில் தெரிவாராம்
வசூலை வாரிக் குவிப்பாராம்.
கதையும் இல்லை ரசிக்க
நல்ல வசனமும் இல்லை
காதிற்கு இனிதாய் ஒரு
இனிய இசையும் இல்லை.
பாடல் வரிகள் எதுவும்
மனதில் பதிவது இல்லை
இசை என்னும் பெயரில்
இரைச்சலையே கேட்கிறோம்.
பாலச்சந்தர் பாலுமகேந்திரா
பாக்கியராஜ் மகேந்திரன் என
கதைகளை அள்ளித் தெளித்து
மிச்சம் வைக்காது வேட்டையாடினர்.
இசைஞானி இளையராஜாவோ
சங்கீத சகாப்தமாக உருவாகி
வேறு இசையை கேட்க முடியாதபடி
நம்மை கட்டிப் போட்டு விட்டார்.
இன்றைய தலைமுறையினரை
நினைத்து மனம் வருந்துகிறேன்
கூச்சலையும் இரைச்சலையும்
கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.
இரண்டரை மணி நேரம் நம்மை
இருட்டு அறையில் சிறைபிடித்து
நம் காதுமடல் கிழியுமளவு பெருத்த
சத்தத்தை கேட்கச் செய்கின்றனர்.
சர்கார் படத்தை சங்கடத்தோடு
சினிமா கொட்டகையில் கண்டு
மனம் வெதும்பி வார்த்த வரிகள்.
பி:கு: நானாக இன்று படத்திற்கு
செல்லவில்லை மாறாக
வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டேன். 😢😢
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
06.11.18
No comments:
Post a Comment