வெள்ளிக் கிழமை சிறப்பு கவிதை
களவாணி
கனவில் தினம் வந்து
களவு செய்கிறாய் என்
கண்மணியுனைக் காண
கடவு இடுகிறாய்.
சிவந்த கண்களோடு
காலையில் எழுகையில்
கண்ணாடியில் பார்த்து
சிரிக்கத் தோணுதடி.
கண நேரமானாலும்
காதல் நினைப்பினிலே
காலத்தை கடத்துவது
வாடிக்கை ஆகுதடி.
குறுஞ்செய்தி தினம்
அனுப்பி வருவதால்
நெடுஞ்செய்தி போல
நினைக்கத் தோணுதடி.
கூட்டத்தில் எப்பவும் நீ
குறுகுறுக்க பார்க்கிறாய்
கிட்டத்தில் வந்தாலோ
கிளுகிளுப்பு தருகிறாய்.
கல்லால் அடிப்பது ஒரு வகை
சொல்லால் அடிப்பது மறு வகை
பார்வையால் அடிப்பது எவ்வகை
பாவையே அதுவே உன் வகை.
உள்ளத்தை களவாடிய
உத்தமியே உன்னுடைய
மேனியைக் களவாடிடும்
முஹூர்த்தம் வாராதோ.
காலை மாலையையும்
கடத்தி விடுவேன் நான்
இரவுப் பொழுதை மட்டும்
சிறை பிடிப்பேன்.
சில்லென்ற தேகத்தில்
சுள்ளென்ற சூரியன்
சுடுகின்ற நேரம் வரை
சேர்ந்திருப்பேன்.
அந்த நாள் வரவிற்கு
ஆசை கொண்டு எந்தன்
ஆயுசு முழுமைக்கும் நான்
காத்து கிடப்பேன்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
28.12.2018
No comments:
Post a Comment