தில்லைக்கு வாருங்கள்
ஆடிய பாதத்துடன்
ஆகாச வெளியினில்
ஆடும் கூத்தினைக் காண
தில்லைக்கு வாருங்கள்.
அருவமாய் இருப்பவன்
உருவம் எடுத்த பின்னே
நின்றாடுவதைக் காண
தில்லைக்கு வாருங்கள்.
எங்கும் நிறைந்த பொருள்
ஏகாந்தமாய் அம்மையுடன்
ஆடும் தாண்டவம் காண
தில்லைக்கு வாருங்கள்.
தடுத்தாட் கொண்டருளும்
தயாபர மூர்த்தியை அவனது
தூக்கிய திருவடியுடன் காண
தில்லைக்கு வாருங்கள்.
கயிலாய மலை ஈசனை
கனகசபைதனிலெழுந்து
குஞ்சிதபாதத்துடன் காண
தில்லைக்கு வாருங்கள்.
நீராடி நீறணிந்து
நமச் சிவாயம் நவின்று
தாண்டவத்தைக் காண
தில்லைக்கு வாருங்கள்.
அப்பருக்கு அருளிய
ஆனந்த கூத்தனின்
அம்பலத்தைக் காண
தில்லைக்கு வாருங்கள்.
நடராஜா நடராஜா நடராஜா
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ பாலா
10.02.2019
No comments:
Post a Comment