யானை யானை
நடமாடும் பிள்ளையாராம்
நான்முகனின் நற்படைப்பாம்
நாட்டிலும் காட்டிலும் சுற்றும்
நெடியதோர் பாலூட்டியாம்
உருவில் மிகப் பெரியதான
விசித்திரமான உயிரினமாம்
விளங்காத இவ்விலங்கிற்கு
யானையெனும் பெயராம்
பன்னிரு மாதங்களைப்
பேறு காலமாய்க் கொண்ட
பிரம்மாண்ட பருவம் அது
பிரமிப்பான உருவம் இது
எடையளவு அதிகம் இதன்
நடையளவும் மிக அதிகம்
படையளவு உணவு நீருக்கு
மடையளவு ஆறு குளம்
இலையும் தழையும் தன்
ஆகாரமாக உட்கொண்டு
செரித்த பின்னே கழிவை
விதையாக வெளித்தள்ளும்
ஆண்டிற்கு ஒரு யானை
ஆயிரம் மரம் விதைக்கும்
ஆண்டவனின் படைப்பில்
அற்புதமானதோர் சிறப்பு
ஓட்டமெடுத்தால் அதற்கு
ஈடு கொடுக்க முடியாது
காடுகளின் மூத்த குடி
கரி என்னும் யானையடி
யானைகளின் வழித்தடம்
மணற் குவியலின் பிறப்பிடம்
ஆறு நதிகளின் இருப்பிடம்
கண்டறிவது இதன் சிறப்பிடம்
வாழைத் தோப்பைக் கண்டு
வேழம் விளையாடி மகிழும்
கரும்புத் தோட்டத்தில் புகுந்து
கண்டபடி உண்டு களிக்கும்
குழந்தை குட்டிகளோடு
கூட்டமாக இடம் பெயரும்
கூட்டுக் குடும்பத்திற்கு
களிறு ஓர் உதாரணம்
ஆஜானுபாகு ஆனால்
அங்குசத்திற்கு அடங்கும்
ஆனைமுகனின் அம்சமாம்
ஆனையைப் போற்றுவோம்.
அன்பன், சிதம்பரம் ஆர்.வீ. பாலா
09.02.2019
No comments:
Post a Comment